Sunday, April 26, 2015

மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரின் புத்தகங்கள் வெளியீடு




             
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்  ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 (2015) நான்கு நாட்கள் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவரின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.


ஆய்வுக் கட்டுரை

.......................................

உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்கள் கலந்து கொண்ட ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடங்கி வைத்தார். பேராசிரியர் ச.மகாதேவன் விழா அரங்கில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்தித்து மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.

மலேசியப் பல்கலைக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய இம்மாநாட்டில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன் பேராளராய் கலந்துகொண்டு “திருக்குறளில் மருத்துவச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.


 120 நூல்கள்

..........................

 உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல் எனும் பொருளில் நடத்தப்பட்ட ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்புநிகழ்வாக சென்னை கலைஞன் பதிப்பகம்.கோலாலம்பூரில் உள்ள மலேசியப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து “ சங்க இலக்கியம் முதல் பாரதி வரை” எனும் தலைப்பில் 60 பேராசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களின் முயற்சியில் 120 நூல்களைத் தயாரித்து அந்தப் பேராசிரியர்களை மாநாட்டிற்கு  அழைத்துச் சிறப்புச் செய்து அவர்களின் 120 நூல்களை மாநாட்டில் வெளியிட்டது.


இருநூல்கள் வெளியீடு

..................................................

 பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன்  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் தலைப்பிலான இருநூல்களை , எழுதியிருந்தார். அந்த நூல்களின் நூல் வெளியீட்டு விழா சனவரி 31`அன்று மாலை 5 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகக் கலையரங்கில் நடைபெற்றது.


சங்க இலக்கியம் முதல் பாரதி வரை எனும் பொருளிலமைந்த 120 நூல்களை இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் துறையின் சிறப்புத்தூதுவரும் மலேசியா ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எஸ்.சாமிவேலு தலைமையேற்று 120 நூல்களை வெளியிட்டார். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ மாரிமுத்து அந்நூல்களைப் பெற்றுக்கொண்டார்.
 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தாண்டவன்,பேராசிரியர் ஜெயதேவன், பேராசிரியர் எஸ்.குமரன்,சென்னை கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் ச.மகாதேவன், தாம் எழுதிய நூல்கள் குறித்துப் பேசினார்.மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் குறித்த நெல்லை பேராசிரியரின் பேட்டியை மலேசிய ஊடகங்கள் இணையதளத்தில் வெளியிட்டன. நூல்களை எழுதிய திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவருக்கு விழாவில் நினைவுப்பரிசினை மலாயாப் பல்கலைக்கழகம் வழங்கிப் பாராட்டியது.

Tuesday, April 14, 2015

திருநெல்வேலி தினகரன் கல்விக் கண்காட்சியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் வழிகாட்டுரை

 
தினகரன்
       திரு.செல்வராஜ் பாராட்டு



இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயிலும்போது தினகரன் சித்திரைமலர் ஆசிரியர் குழுவில் இருந்தேன்.

தினகரன் சிறப்பிதழ்களுக்காக கேமராவுடன் அலைந்த நாட்களை இன்றைய தினகரன் கல்விக்கண்காட்சி நினைவுபடுத்தியது.

வண்ணார்ப்பேட்டை தினகரன் அலுவலகம் அப்போது,இன்றுள்ள சக்தி மருத்துவமனை உள்ள இடத்தில் இருந்தது.

அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்த திரு.செல்வராஜ் அவர்களை விழா மேடையில் பார்த்தபோது மனம் மகிழ்ந்தது.கல்லூரி மாணவர்களை அப்போதே ஊக்கப்படுத்தி இருக்கிறார்.முகநூல் தோழி விஜிஅவர்கள் இன்று நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினார்.நாற்பது நிமிடநேரம் “ அடுத்து என்ன படிக்கலாம்?” என்ற தலைப்பில் பேசினேன்.அரங்கம் நிரம்பிவழிந்தது.மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டார்கள்.சன் தொலைக்காட்சியின் திரு.சிவகுமாரும்,தினகரன் செய்தியாளர்கள் திரு.முத்துகிருஷ்ணன்,திரு.ஜெகதீசன், ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.சீனிவாசன் அழகாக நாளிதழில் செய்தியாக்கியிருந்தார். பழைய நினைவுகளின் படிக்கட்டில் விழா நிறுத்திவிட்டது.அருமையானகல்வித்திருவிழாவை தினகரன் நடத்தியது.மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
*
சௌந்தர மகாதேவன்

Saturday, April 11, 2015

ஜெயகாந்தன் :யாரும் உடைக்க முடியாத ஞானபீடம் : சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி




·       
மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழின் தனித்துவமான எழுத்துஇயக்கம் ஜெயகாந்தன்.

புரையோடிப் போன சமூகத்தின் போலி முகமூடிகளைத் தன் பேனாவால் கிழித்தெறிந்தவர்,
தனிமனிதனும் இயக்கம்தான் என்று நிரூபித்து எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் மதிப்புதேடித்தந்தவர்.
வானத்தில் பறக்கும் பறவை விரிவானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பார்ப்போரைக் கழுத்துவலிக்கத் திரும்பிப் பார்க்கவைத்ததுபோல் எழுத்துவானத்தில் இறுதிவினாடிவரை பறந்த பரந்த,மனதுக்காரர்.

தனக்குச் சாமரம் வீசிக்கொண்டு அவர் எதனோடும் சமரசப்படுத்திக்கொள்ளவில்லை.

அவர் இருக்கும்போதே ஒவ்வொருவாரமும் அவரைப்பற்றி இந்து நாளிதழ் அரைபக்கக் கட்டுரை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியதும் சமஸ் அவர்களைக் கொண்டு விரிவான நேர்காணல் வெளியிட்டதும் வரலாற்றுச்  சுவடுகளாய் காலப்பரப்பில் நின்றுநிலைக்கச் செய்துவிட்டது. 

நவீனஇலக்கியம்,பத்திரிகைத்துறை,அரசியல், திரைத்துறை யாவற்றிலும் மலினப்படுத்தாமல் தன் ஆளுமையை ஆளப்பதித்தவர்.அவர் வாழ்வதற்காக எழுதியவர் அல்லர்,எழுதவே வாழ்ந்தவர்,எழுத்தாகவே வாழ்ந்தவர்.

ஜெயகாந்தன் காலத்தின் கம்பீரம்,யாரும் உடைக்க முடியாத ஞானபீடம்.அவர், வலிகளுக்கிடையேயும் வலிமையோடு வாழ்ந்த இன்னொரு புதுமைப்பித்தன்.
ஜெயகாந்தன் எழுத்துவனம்,அவரை யாரும் வரப்புக்குள் சுருக்கிவிட முடியாது.எட்டுத்திக்கும் சிறகுவிரித்துப் பறந்துவிட்டு இறுதியில் திசைகாட்டியாய் நின்று யாவற்றையும் மௌனமாய் பார்த்தது காலம் செய்த கோலம்.

சிந்தித்துப் பார்த்தால் அவரைப்போல் ரௌத்திரம் பழக இனி யார் உள்ளார் என்று கேட்கத் தோன்றுகிறது.எல்லோரையும் ஈர்த்த ஜெயகாந்தத்தை வழக்கம்போல் காலம் தெரியாமல் உண்டு, செரிக்கமுடியாமல் நின்று மலைத்துநிற்கிறது.
ஆனாலும் அவரை யாரும் மறைக்க முடியாது.


Thursday, April 2, 2015

Sadakathullah Appa Collge,Tirunelveli." Lecture On Islam and Social Economy" Held .Justice Thiru.V.Ramasubramanaian Special Address



திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.வெ.இராமசுப்பிரமணியன் சிறப்புரை



திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில் 2.4.15 காலை 10 மணியளவில் அல்ஹாஜ் L.K.S மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. 

மாண்புமிகு நீதியரசர் திரு.வெ.இராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 
மேலப்பாளையம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் L.K.M.A. நவாப் ஹூசைன் வரவேற்றுப் பேசினார்.

 கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமையுரையாற்றினார்.

 ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் MKM முகமது நாசர், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வள்ளிநாயகம், மூத்த வழக்கறிஞர் அப்துல்வகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார்.

 விழாவின் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு.வெ. இராமசுப்ரமணியன் கலந்துகொண்டு

 “ இஸ்லாமும் சமூகப் பொருளாதாரமும்” என்ற தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றும், “ திருக்குர்ஆனின் “அல்ஹம்துலில்லாஹ்..” சூராவின் தமிழ் ஆக்கம் குறித்துப்பேசித் தன் உரையைத் தொடங்கியவர், கம்பராமாயணத்தின் முதல்பாடாலான “ உலகம் யாவையும் தாமுளவாக்கலும்..” என்ற பாடலோடு ஒப்பிட்டுப் பேசினார்.புதிய ஆத்திசூடிக்கு கடவுள் வாழ்த்து எழுதிய பாரதி “ஆத்திசூடி இளம்பிறை அணிந்து..” என்று சிவபெருமான்,திருமால், அல்லா, ஏசுநாதர்,பிரமபிதா என்று அனைத்துசமயக் கடவுளர்களையும் ஒரேபாடலில் தந்து அவர்களின் பெயர் வேறுவேறாக இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்று பாடி முடித்திருப்பார். 1987 இல் நடந்த  என் திருமணத்தில்  பத்திரிக்கையின் மேல்பகுதியில் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்” என்ற வாசகத்தோடு மும்மத வாசகத்தையும்  இடம்பெறச் செய்து, தீயை வலம்வரும் சப்தபதியைப் பற்றியும் தந்திருந்தேன். ஒரு லட்சரூபாய் ஊதியம் பெறும் ஒருவன் யாருக்கும் தராமல் மனநிறைவு இல்லாமல் வாழ்வதைவிட இருபதாயிரம் ரூபாய் ஊதியத்தில் மனநிறைவுடன் மற்றவர்க்கு ஜகாத் கொடுத்து வாழும் வாழ்வு நிறைவானதாய் அமைகிறது.பணம் கொண்டு எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது. எல்லோரும் ஜகாத் பணத்தை உரியமுறையில் தரத்தொடங்கிவிட்டால் எல்லோரும் எல்லாமும் பெறமுடியும்,இல்லாத நிலை இல்லாமல் போகும்.வட்டியில்லா இஸ்லாமியப் பொருளாதாரம் சிறப்பானது.பணத்தைக் கோடிகோடியாக வீட்டிற்குள் கருப்புப் பணமாய் பதுக்கிவைப்பதைவிட  அந்தப் பணத்தை ஒரு தொழிலில் முதலீடு செய்தால் அதைநம்பி ஆயிரமாயிரம் தொழிலாளர் வேலைவாய்ப்புப் பெறுவர்.அவர்கள் முறையாக ஜகாத் தருவர்,அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடைந்து பொருளாதாரம் மேன்மையடையும்.முறையற்ற வழியில் சேர்த்த பணத்தை ஏழைகளுக்குக் கொடையாய் கொடுப்பதை இறைவன் விரும்புவதில்லை.வீடு முன்னேறினால் நாடுமுன்னேறும், நாடு முன்னேறினால் நாமும் முன்னேறுவோம். மற்றவரை ஏமாற்றிக் கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பதைவிட மற்றவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தல் உன்னதமானது.வருமானப் பணத்தை அப்படியே செலவு செய்வதைவிட சிக்கனமாகச் சேமித்துவைக்கும் பழக்கம் பெண்களிடம் உண்டு.அது நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படை” என்று உரையாற்றினார்.

மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளித் துணைத் தலைவர் LKS மீரான்மைதீன் நன்றி கூறினார்.